திருச்சி: ""பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பு குறைவால், தமிழக பொறியியல் கல்லூரிகளில் 32 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன,'' என்று தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன் திருச்சியில் கூறினார்.
இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: திருச்சியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) நிறுவனம் நடப்பாண்டு துவக்கப்பட்டு பகுதிநேர வகுப்புகள் முதல் கட்டமாக துவங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து முழு நேர வகுப்பு துவங்கப்படவுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப பூங்கா (என்.ஐ.டி.,)வில் தற்காலிகமாக ஐ.ஐ.எம்., வகுப்புகளும், அதில் பயிலும் மாணவர்களின் விடுதிகளும் செயல்படவுள்ளன.
தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பயில மேல்நிலை கல்வியில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமானது. ஆனால், தமிழகத்தில் ஜாதி வாரியாக பல்வேறு முறைகள் அமலில் உள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 18 ஆயிரமும், நடப்பாண்டு 32 ஆயிரமும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாகவுள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) துறையில் இடங்கள் காலியாக உள்ளன. பொருளாதார மந்த நிலை மற்றும் வேலை வாய்ப்பு குறைவு காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. இதற்காக புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவக்க அனுமதி தர தடை செய்யவில்லை. சமச்சீர் கல்வியை வரவேற்கிறோம்.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நான்கு வகை கல்வி முறை உள்ளது. சமச்சீர் கல்வி முறை வந்தால் தொடக்கக் கல்வி தரமும் உயரும், உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும். அதனால், சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம்.
பொது கல்விதிட்டம் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் அனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி மற்றும் திட்ட கமிஷன் துணைத்தலைவர் நாகநாதன் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை மூலம் சில பரிந்துரை அளிக்கவுள்ளனர். அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படவுள்ளன. இவ்வாறு கணேசன் கூறினார்.
--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)
No comments:
Post a Comment