தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளைப் புலி ஈன்ற இரண்டு வெள்ளைப் புலி குட்டிகளுக்கு "ஆகான்ஷா', "நம்ப்ரதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில், டில்லி தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகையை சேர்ந்த பீஷ்மர் என்ற ஆண் வெள்ளை புலியும், அனு என்ற பெண் வெள்ளை புலியும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெண் வெள்ளைப் புலி அனு, கடந்த மார்ச் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. முதல் முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையை சேர்ந்த வெள்ளைப் புலி, குட்டிகளை ஈன்றதால் ஊழியர்களும், அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு குட்டி குடல் வளர்ச்சியடையாத காரணத்தால் இறந்தது. தாய் புலியும், இரண்டு குட்டிகளையும் ஊழியர்கள் கவனமாக பராமரித்து வருகின்றனர். சில மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாக கொண்டிருந்த குட்டிகள், மாட்டிறைச்சியையும் உண்ணத் துவங்கின. தற்போது, இறைச்சியை உண்ண வெள்ளைப்புலி குட்டிகள் நன்கு பழகிவிட்டன. இதனால், காலையில் ஒரு கோழியும், மாலையில் மாட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. தற்போது, தாய் புலியுடன், குட்டிகளும் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.
தாயுடன் குட்டிகள் ஓடி விளையாடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெள்ளைப் புலி குட்டிகளின் அட்டகாசங்களை ரசிப்பதற்காகவே தினசரி ஏராளமானோர் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். தற்போது, வெள்ளைப்புலி குட்டிகளுக்கு ஆகான்ஷா மற்றும் நம்ப்ரதா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூங்கா அதிகாரிகள் பெயர் கூறி அழைத்தால் வெள்ளைப்புலி குட்டிகள் ஓடி வருகின்றன.
--
நன்றி,
தினமலர்.
No comments:
Post a Comment