புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 97.5 சதவீதம் நிறைவு * தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தகவல்
கோவை : `தமிழகத்தில் ஜனவரி முதல் அனைத்து சட்டசபை தொகுதியிலும் புகைப்படம் எடுக்கும் மையம் செயல்படும்' என, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.கோவை, நீலகிரி மாவட்டத்தில், புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, அடையாள அட்டை வழங்கும், தயாரிக்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆய்வு செய்தார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 97.5 சதவீதம் முடிவடைந்துள்ளது. சென்னை (89 சதவீதம்), கோவை (90 சதவீதம்) தவிர, பிற மாவட்டங்களில் இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. கேரளா, புதுச்சேரியில் இப்பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கும் படிவங்கள் அதிக அளவில் வந்துள்ளன. கோவை மாவட்டத்தில், திருப்பூர் தொகுதியில் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. வேலை உள்ளிட்ட காரணங்களால், தற்காலிகமாக குடிபெயர்வோர் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்; கள ஆய்வுக்கு பிறகே, பெயர்களை சேர்க்கவும், படிவம் சரிபார்க்க செல்லும் போது போட்டோக்களை வாங்கவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள், பெயர்களை சேர்க்க புதிதாக விண்ணப்பிக்கும் போதே, போட்டோக்களையும் தர வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், போட்டோக்கள் பெறுவது, 23 சதவீதம் அதிகரித்துள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, புகைப்படம் எடுக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு தேவையான கேமரா உள்ளிட்ட கருவிகள் வாங்கும் பணி நடக்கிறது. இம்மையங்கள், ஜனவரி முதல் செயல்பட துவங்கும். இம்மையங்களில், புகைப்படம் எடுப்பதுடன், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படும்; ஊழியர் நியமிப்பது குறித்து, அரசுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, நரேஷ் குப்தா கூறினார்
Source : http://www.dinamalar.com/