புதுடில்லி: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடியின், தானாக முன்வந்து ஓய்வு பெறும் விண்ணப்பத்தை, இறுதியில் அரசு ஏற்றுக் கொண்டது. `இனி நான் அரசுடன் பணியாற்றுவேன்; அரசுக்காக பணியாற்ற மாட்டேன்' என்று கிரண் பேடி கூறினார். இந்தியாவில் 1972ம் ஆண்டு பிரிவில், முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற பெருமையை பெற்ற கிரண் பேடி, மகசேசே விருது, ஜனாதிபதியின் சிறப்பு விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அமிர்தசரசில் பிறந்த கிரண் பேடி, டில்லியில் 30 ஆண்டுகளுக்கு முன் டில்லி போக்குவரத்து விதி மீறல்களை தடுத்தார். ஐ.நா., வின் அமைதிப்படை துறையில், போலீஸ் ஆலோசகராகவும் கவுரவ பதவி வகித்தவர். அவரது பணியை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தது ஐ.நா., திகார் சிறையில் பணியாற்றிய போது, பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். இதற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். டில்லி போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த கிரண் பேடியை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனராக மத்திய அரசு மாற்றியது. தன்னை விட இரண்டு வருடம் ஜூனியரான ஒய்.எஸ்., தத்வாலை டில்லி கமிஷனராக நியமித்தது, கிரண் பேடியை கடும் அதிருப்தியடையச் செய்தது. இதையடுத்து தானாக முன்வந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தார். நவம்பர் 15ம் தேதி இதற்கு கிரண் பேடி விண்ணப்பித்தும், அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், தேசிய போலீஸ் கமிஷனில் நியமிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கிரண் பேடிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அரசு வேலை எதையும் ஏற்க கிரண் பேடி மறுத்துவிட்டார்.தன்னை பணியில் இருந்து விரைவில் விடுவிக்கும் வகையில், பிப்ரவரி 15ம் தேதி வரை நீண்ட நாள் விடுப்பில் இருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக நேற்று முன் தினம் தகவல் தெரிவிக்கப் பட்டது. பணியில் இருந்து கிரண் பேடி விடுவிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. `இனி அரசுடன் பணியாற்றுவேன். அரசுக்காக பணியாற்ற மாட்டேன்' என்று கிரண் பேடி கூறியுள்ளார். காவல் துறை தலைவராக காந்தி, படேல் வர வேண்டும் : `பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்'டின் மூன்று நாள் கூட்டத்தில், ஸ்வரூப் குப்தா நினைவு விழாவில், கிரண் பேடி சமீபத்தில் உரையாற்றினார். `காவல் துறைக்கு, காந்தி, படேல், சாஸ்திரி போன்றவர்கள் தலைவராக இருக்க வேண்டும்' என்று கூறினார்.அவர் பேசியதாவது:சுதந்திர போராட்டத்தில் காந்தி, விடுதலைக்குப் பிறகு நாட்டை ஒன்றாக்கியதில் படேல், நாட்டு முன்னேற்றத்திற்காக பண்டித நேரு, ஆன்மிகத்தில் சுவாமி விவேகானந்தர் முதலானவர்கள் வழிகாட்டுபவர்களாக இருந்தனர். அதேபோல, போலீசுக்கு தேவை வழிகாட்டும் மேலதிகாரிகள். அவர்களுக்கும், போலீசுக்கும் உள்ள வித்தியாசம் காக்கி உடை ஒன்று தான்.போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆடம்பர பொருட்கள் அவர்கள் ஊதியத்தில் வாங்கியிருக்க முடியாது. பரிசுப் பொருட்களாகவோ அல்லது வரதட்சணை மூலமாகவோ பெற்றிருக்கலாம். போலீசில் சில அதிகாரிகள் மது அருந்திவிட்டு இரவு ரோந்து செல்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பேடி பேசினார். |
No comments:
Post a Comment