'பங்க்'களில் பெட்ரோல், டீசல் இருப்பு காலி : அதிகாரிகள் ஸ்டிரைக்கால் தமிழகம் தத்தளிப்பு: தினமலர்: "'பங்க்'களில் பெட்ரோல், டீசல் இருப்பு காலி : அதிகாரிகள் ஸ்டிரைக்கால் தமிழகம் தத்தளிப்பு
ஜனவரி 09,2009,00:00 IST
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளதோடு, டீசல் கிடைக்காததால் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கொதிப்படைந்துள்ளனர்.
'இருக்கிற சம்பளம் போதாது; இன்னும் வேண்டும்' என, வலியுறுத்தி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இருப்பினும், கச்சா எண்ணெய் எடுப்பதில் துவங்கி அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக மாற்றி 'பங்க்'களுக்கு அனுப்புவது வரையிலான அனைத்து பிரிவு அதிகாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பணிகள் பாதிப்படைந்துள்ளன.
ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தாலும், 'விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்' என்ற அரசின் அறிவிப்பு காரணமாக பெட்ரோல் 'பங்க்'கள் அதிக அளவில் ஸ்டாக் வைக்கவில்லை. இதனால், குறைவான அளவில் இருந்த பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து, நேற்று காலை முதலே தட்டுப்பாடு ஏற்படத் துவங்கியது. லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக டேங்கர் லாரிகளும் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதனால், 'பங்க்'களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதில் பாதிப்பு அதிகரித்தது. தமிழகம் முழுவதும் 3,300 பெட்ரோல் 'பங்க்'களும், சென்னையில் 300 'பங்க்'களும் உள்ளன. சென்னையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட 'பங்க்'களில் நேற்று காலை முதல் கூட்டம் அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என ஒரே நேரத்தில் பெட்ரோல் 'பங்க்'களை முற்றுகையிட்டன. கூட்டத்தைச் சமாளிக்க முடியாததால், 'ரேஷன்' முறை அமல்படுத்தப்பட்டது. மினரல் வாட்டருக்கு பயன்படுத்தப்படும் 20 லிட்டர் கேன்களை எடுத்துவந்த ஆட்டோ டிரைவர்கள், அதை நிரப்பித் தருமாறு கேட்டனர். பெட்ரோல் 'பங்க்' ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அனைத்து 'பங்க்'களிலும் கூட்டம் நிரப்பியிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் பலர் வாடகையை உயர்த்தியதால் பயணிகள் அவதியடைந்தனர். இதே நிலை நீடித்தால், பள்ளி, கல்லூரிகளுக்கு இயக்கப்படும் வேன்களும், ஆட்டோக்களும், பஸ்களும் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், மாநகர பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கொதிப்படைந்துள்ளனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 9, 2009
'பங்க்'களில் பெட்ரோல், டீசல் இருப்பு காலி : அதிகாரிகள் ஸ்டிரைக்கால் தமிழகம் தத்தளிப்பு: தினமலர்
Posted by Arul at Friday, January 09, 2009
No comments:
Post a Comment