முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்: தினமலர்: "முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்
ஜனவரி 15,2009,00:00 IST
'முனியா... இங்கிட்டு வா...' என்று பாசத்தோடு அழகு அழைக்க, 'உஷ்...உஷ்...' என்று அனல் வீசும் பெருமூச்சுக்காற்றை விட்டப்படி 'ஒன்றுமே தெரியாத பச்சிளம் பாப்பா போல்' அருகே வந்து நிற்கிறது முனியாண்டி கோயில் காளை. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த காளைக்கு தான் முதல் மரியாதை.
ஊர் காவல் தெய்வமான முனியாண்டி கோயிலுக்கு நேர்த்தி கடனாய் விடப்படும் காளைகளில் ஒன்றை கோயில் நிர்வாகம் தேர்வு செய்கிறது. அதற்கு 'முனியாண்டி' என்று பெயர் சூட்டி, அழகு என்பவரிடம் 'தத்து' கொடுப்பது வழக்கம். கடந்த 25 ஆண்டுகளாக அழகு குடும்பம் கோயில் காளைகளை மட்டுமே வளர்த்து வருகிறது. தற்போதுள்ள முனியாண்டி காளைக்கு 4 வயதாகிறது. அறிமுகம் இல்லாதவர் பக்கத்தில் சென்றாலே கால் குழம்பு தேய, திமில் புடைக்க, ஒரு 'குத்து' விடவா என கண்கள் வெறிக்க எச்சரிக்கை விடுக்கிறது. ''ஏதாவது கோயில் விசேஷம்னா யாராச்சும் காளைக்கு வேட்டி, துண்டுனு மரியாதை செலுத்துவாக. பிறகு தேங்காய் சில்லு, புண்ணாக்கு, அரிசி, பருத்தி விதைனு விருப்பப்பட்டதை கொடுப்பாக'' என்று பாசம் காட்டுகிறது அழகு குடும்பம்.
அலங்காநல்லூரில் யாரும் பிடிக்காத, யாருக்கும் பிடிகொடுக்காத ராஜாவாக இருக்கும் முனியாண்டிக்கு, மற்ற ஊர் ஜல்லிக்கட்டு என்றாலே குஷி வந்துவிடுகிறது. குங்குமப் பொட்டு, சலங்கை கட்டுதல் என்று அலங்கரித்துவிட்டாலே, 'இதுக்குதானே இவ்வளவு நாளா காத்திருந்தேன்' என முனியாண்டி விளையாட தயாராகிவிடுகிறது. மற்ற நாட்களில் அழகு வீடுதான் கதி.''இதுவரை மற்ற ஊர் ஜல்லிக்கட்டில் முனியாண்டி பிடிபட்டதாக சரித்திரம் இல்லை. இனியும் பிடிபடபோவதில்லை'' என்று தன்னடக்கத்துடன் கூறுகிறது அழகு குடும்பம்.
அதை ஒத்துக்கொள்ளும் விதமாக 'ஆமாம்' என்பதுபோல் தலையை ஆட்டியது முனியாண்டி காளை. இதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டிலும் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. முதலில் சம்பிராதய முறைப்படி கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து காளையை அவிழ்த்துவிடுகின்றனர். அடுத்து குறிப்பிட்ட சமூகத்தினரின் கோயில் காளைகள் விடப்படுகின்றன. இவற்றை பிடிப்பது போல் பாசாங்கு காட்டும் 'காளையர்கள்', அருகில் வந்தவுடன் பயபக்தியுடன் தொட்டு வணங்கி 'தப்பிச்சோம்டா சாமி' என்று பின்வாங்குவதை இன்றும் பார்க்கலாம்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்: தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment