'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்': தினமலர்: "'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்'
ஜனவரி 15,2009,00:00 IST
அம்மன் கோயிலில் கிறிஸ்தவர்களுக்கு முதல் மரியாதை. அனைத்து சமுதாயத்தினருக்கும் சம உரிமை; மாதா கோயில் சப்பரத்தை இழுக்கும் இந்துக்கள்; கந்தூரி விழாவில் இந்து, கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் என நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பனங்குடி கிராமம்.இப்பகுதிகளில் 'நாடு'(பல கிராமங்களை உள்ளடக்கியது) என்ற கட்டமைப்பு கடந்த பல தலைமுறைகளாக உள்ளது. பனங்குடி நாட்டின் கீழ் கோவினிபட்டி, பிளாமிச்சம்பட்டி, மும்முடிச்சான்பட்டி, சக்கரவர்த்திபட்டி, வீரனேந்தல்பட்டி, சீகூரணிபட்டி கிராமங்கள் உள்ளன.
அனைவருக்கும் மரியாதை: இங்கு பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். பத்துநாள் நடைபெறும் விழாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் 'மரியாதை' செலுத்தப்படுகிறது.'முதல் மரியாதை' பனங்குடி நாட்டு தலைவருக்கு அளிக்கப்படும். ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் மட்டுமே தலைவராக முடியும் என்ற முறைப்படி, கிறிஸ்தவர்கள் தான் தலைவராகின்றனர். தலைவர் என்ற அடிப்படையில் அம்மன் கோயில் முதல் மரியாதையை பெறுவது கிறிஸ்தவர்கள் தான்.பிரதான நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தும் பொறுப்பு ஆதிதிராவிடர், நாவிதர், துணி துவைப்பவர் போன்ற சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சமுதாயத்தினர் பூஜை செய்து மரியாதை செலுத்திய பிறகு தான் தேர் புறப்படும். முஸ்லிம்கள் பங்கேற்று, அனைத்து பணிகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றனர்.
கந்தூரியில் இந்துக்கள்: வியாகுல அன்னை ஆலயத்தில் நடக்கும் இயேசு வின்னேற்ற விழாவில் மாதாவின் சப்பர பவனி நடத்தப்படும். இந்துக்களும், முஸ்லிம்களும் சப்பரத்தை இழுத்து செல்வர். மசூதியில் நடக்கும் கந்தூரி விழாவில் இந்து, கிறிஸ்தவர்கள் தான் சிறப்பு விருந்தினர்களாக கவுரவிக்கப்படுவர்.பொங்கல் பண்டிகையின் 2 வது நாள் அன்று இங்கு நடக்கும் மஞ்சுவிரட்டு ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. கிராம பெரியவர்கள் ஒன்று கூடி, 7 கிராமங்களிலும் ஒவ்வொரு வீடாக சென்று 'தொழு திறந்து' (மாடு அவிழ்த்தல்) விடும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. 4 ம் நாள் சர்ச்சுகளின் முன் கிறிஸ்தவர்கள் பொங்கலிடும் போது இந்துக்கள் அதில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
பனங்குடியை சேர்ந்த புஷ்பவனம் கூறுகையில், 'அம்மன் கோயில் விழாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடந்த 250 ஆண்டுகளாக இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றி வருகிறோம். கிறிஸ்தவ, முஸ்லிம் விழாக்களில் நாங்கள் தான் முன்நின்று பணிபுரிவோம்' என்றார்.
ஊர் தலைவர் சேசுராஜ் கூறுகையில், 'பனங்குடிக்கு உட்பட்ட 7 கிராமங்களிலும் பசுமையை பாதுகாத்து வருகிறோம். செடி, கொடிகளை அழித்து விடும் என்பதால் யாரும் ஆடு வளர்ப்பதில்லை. திருமணங்களின் போது வரதட்சணை கேட்பது கிடையாது. சமுதாய வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறோம்' என்றார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்': தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment