மதுரையில் பெட்ரோல் டீசல் 'பங்க்'கள் மூடல்: பரிதவித்த பொதுமக்கள்: தினமலர்: "மதுரையில் பெட்ரோல் டீசல் 'பங்க்'கள் மூடல்: பரிதவித்த பொதுமக்கள்
ஜனவரி 09,2009,00:00 IST
மதுரை: மதுரையில் டேங்கர் லாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஸ்டிரைக் காரணமாக 'பங்க்'களில் பெட்ரோல், டீசல் இருப்பு காலியானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். 'பங்க்'களில் மக்களிடம் போட்டி ஏற்பட்டது. இருப்பு காலியானதால் மூடப்பட்டன.சப்ளை நிறுத்தம்: மதுரை மண்டலத்திற்கு தேவையான பெட்ரோல், டீசல் சென்னை, நாகப் பட்டினம், மங்களூர் போன்ற இடங்களில் இருந்து பைப் லைன்கள் மூலம் பெறப்படுகிறது.
திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள டெர்மினல்களில் பெறப்பட்டு 16 மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. ஸ்டிரைக் காரணமாக பெட் ரோல், டீசல் சப்ளை தடைப்பட்டுள்ளது. மதுரையில் 'பங்க்'கள், அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை நேற்று முன்தினம் நிறுத்தப் பட்டது.அலுவலர்கள் ஸ்டிரைக்: இந்த ஸ்டிரைக்கில் இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்கேற்கவில்லை. ஐ.ஓ.சி., அலுவலர் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறுகையில், 'மண்டலத்தில் 52 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் மத்திய அரசுடன் எண்ணெய் நிறுவன சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமூக உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும்' என்றார்.
பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர்கள் சங்க தலைவர் திருவேங்கடம் கூறுகையில், 'மதுரை மற்றும் சுற்று பகுதிகளில் 50 'பங்க்'கள் உள்ளன. நேற்று முன் தினம் வரை எண்ணெய் நிறுவனங்கள் சப்ளை செய்தன. 'பங்க்'களில் இருப்பு குறைந்ததால் மூட வேண்டிய நிலை. எண்ணெய் நிறுவனங்கள் சப்ளை செய்தால் தான் வழங்க முடியும்' என்றார்.
போலீஸ் பாதுகாப்புடன் சப்ளை: மதுரையில் பெரும்பாலான 'பங்க்'களில் நேற்று காலை நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பெட்ரோல், டீசல் வினியோகம் நடந்தது. பெட்ரோல், டீசல் பிடிப்பதில் பல 'பங்க்'களில் இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பெட்ரோல், டீசல் சப்ளை நடந்தது. ஒரு சிலர் கேன், பாட்டில்களில் வாங்கினர். சிலர் வழக்கமாக வாங்குவதை விட மூன்று மடங்கு கூடுதலாக வாங்கியதால் பெட்ரோல், டீசல் அதிகளவில் விற்பனையானது. சிலர் கூடுதலாக வாங்குவதற்கு பின்னால் வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மோதலும் நடந்தது. நேற்று பகல் ஒரு மணியளவில் பெரும்பாலான 'பங்க்'கள் மூடப் பட்டு 'ஸ்டாக் இல்லை' என எழுதி வைக்கப் பட்டன. இதனால் லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் நிறுத்தப்பட்டன. ஒரு சில மினி பஸ்களும் டீசல் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
தகவல் தெரிவிக்க மறுப்பு : மதுரை புது நத்தம் ரோடு சந்திப்பிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் மொகரம் விடுப்பு காரணமாக ஒரு சில அலுவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். ஸ்டிரைக் குறித்து அவர்களை தொடர்பு கொண்ட போது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன அலுவலர்களும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டு ஒதுங்கி கொண்டனர். இதனால் பெட்ரோல், டீசல் எப்போது கிடைக்கும், நிலைமை எப்போது சீராகும் என்பது தெரியாமல் உள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 9, 2009
மதுரையில் பெட்ரோல் டீசல் 'பங்க்'கள் மூடல்: பரிதவித்த பொதுமக்கள்: தினமலர்
Posted by Arul at Friday, January 09, 2009
No comments:
Post a Comment